ஆண்டுகள் கடந்த போதும்
உன் வாசம் சுவாசம்
முழுதும் பரவி விரிகிறது
விருப்பங்களைக் கடந்து
வெறுப்புகளைச் சேமித்து
உதிரங்களை உயிராக்கி
மீண்டும் கொலை செய்து
பல மரணங்களைப்
பரிசளித்துக் கொள்கிறேன்
என் விழிதாண்டிய உன் பார்வையும்
என் உள்ளம் தாண்டிய உன் உறவும்
பொய்ப்பிக்கும் பலருக்குப்
பட்டுப் போன மரமாய்
என் விரல் இடுக்குகளில்
என்றோ இறுக்கிப்பிடித்த கைகளின் வெப்பம்
வேரூன்றி நிற்கிறது
விதை விதைத்து வீணாய் போதலில்
அறுவடைக்குப்பின் அறுபட்ட போதும்
என் தழும்புகளில் இன்னும் கூட
பிசுபிசுக்கிறது உன் குருதி
இருந்த போதும்
அடைமழைக்குப்பின் வெள்ளமாய்
பெருக்கெடுக்கவில்லை
தேங்கி நிற்கிறேன்
வாழ்வெனும் துளிகளில்
மிகத் துல்லியமாய்
- சல்மா தினேசுவரி ( Salma Dhineswary)


'என் விரல் இடுக்குகளில்
ReplyDeleteஎன்றோ இறுக்கிப்பிடித்த கைகளின் வெப்பம்
வேரூன்றி நிற்கிறது'...
அருமைங்க சகோ!
ஆறிப்போகாத வெம்மை
முன்பனிக் காலத்தில் வழங்கும்
கதகதப்பாய் கடந்துபோன நினைவுகள்!